வாழ்வாதாரங்களை காக்க போராடும் விவசாயிகளை, தமிழக அரசு அச்சுறுத்துகிறது திவாகரன் குற்றச்சாட்டு

வாழ்வாதாரங்களை காக்க போராடும் விவசாயிகளை தமிழக அரசு அச்சுறுத்துகிறது என திவாகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2018-07-07 23:00 GMT
வடுவூர்,

திருவாரூர் மாவட்ட ம.தி.மு.க. அவைத்தலைவர் ராமச்சந்திரனின் படத்திறப்பு நிகழ்ச்சி வடுவூர் மேல்பாதி கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி, ராமச்சந்திரனின் படத்தை திறந்து வைத்தார். இதில் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

திராவிட இயக்கங்களை வீழ்த்தி விடலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால் அவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது. பகல் கனவாகவே முடியும்.

தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறி உள்ளது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பதற்கு வீதியில் இறங்கி போராடுகிறார்கள். விவசாயிகளின் நியாயமான உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்கும் தமிழக அரசு அதிகாரங்கள் மூலம் விவசாயிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 38 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்று உள்ளதாக கூறுகிறார். மக்கள் ஏன் போராடுகிறார்கள்? என்பதை உணர்ந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இந்த அரசால் இயலவில்லை. தனது இயலாமையை மறைப்பதற்காக அரசு, மக்களை நசுக்குகிறது. தவறுகளை சரி செய்யாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெறும் அறிக்கைகள் வெளியிடுவதால் பயன் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்