பொதுமக்களிடம் இருந்து ரூ.1¼ லட்சம் காலாவதியான மசாலா, மாவு பொருட்கள் பறிமுதல்

பெரம்பலூர் சமத்துவ புரம் நேதாஜி நகர் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரூ.1¼ லட்சம் காலாவதியான மசாலா, மாவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-07-07 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சமத்துவபுரம் நேதாஜி நகர் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் நேற்று அதிகாலையில் குவியல், குவியலாக மசாலா பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள், மைதா, கோதுமை, பச்சரிசி ஆகியவற்றின் மாவு பாக்கெட்டுகள் கிடந்தன. இதனை கண்ட நேதாஜி நகர் பகுதி பொதுமக்கள் அதனை சமையலுக்கு பயன்படுத்துவதற்காக பொதுமக்கள் அள்ளி சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் காலாவதியான பொருட்கள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் சவுமியா சுந்தரி உத்தரவின் பேரில், பெரம்பலூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லட்சுமண பெருமாள் தலைமையில், உணவு பாதுகாப்பு துறையினர் நேதாஜி நகருக்கு சென்று, தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த காலாவதியான பொருட்களை ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டு கொண்டனர்.

இதையடுத்து பொதுமக்கள் வீடுகளில் இருந்த காலாவதியான பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் சவுமியா சுந்தரி காலாவதியான பொருட் களை பார்வையிட்டார். பின்னர் குழி தோண்டி, அதில் காலாவதியான பொருட்களை போட்டு மூடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அந்த காலாவதியான பொருட்கள் புதைக்கப்பட்டது.

புதைக்கப்பட்ட காலாவதியான மசாலா பொருட்கள், மாவு பாக்கெட்டுகளின் எடை சுமார் 450 கிலோவும், அதன் மதிப்பு சுமார் ரூ.1¼ லட்சம் இருக்கும் என்று அதிகாரி தெரிவித்தார். மேலும் இதுபோன்ற காலாவதியான உணவு பொருட்கள் குறித்தும், உணவு பொருட்கள் தரம் குறித்தும் பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் அல்லது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 2-தளத்தில் இருக்கும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் சவுமியா சுந்தரி தெரிவித்தார். 

மேலும் செய்திகள்