பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலவசமாக வழக்கு நடத்தி தரப்படும் நீதிபதி தகவல்

பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலவசமாக வழக்கு நடத்தி தரப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-07 23:00 GMT


தொண்டி,

திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் மாணவிகளுக்கு சட்டம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி பாலமுருகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி அனைவரையும் வரவேற்றார்.

இதில் நீதிபதி பாலமுருகன் பேசியதாவது:- இன்றைய உலகில் பெண்கள் மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதனை எதிர்கொள்ள பெண்கள் அடிப்படை சட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்க திருவாடானை நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தை அணுகி பெண்கள் சட்ட விழிப்புணர்வு அடையலாம். பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த வட்ட சட்ட பணிகள் குழுவை அணுகலாம். இந்த மையத்தில் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குவதுடன் பொதுமக்கள், பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக இலவசமாக வழக்கு நடத்தி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரப்பெருமாள், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன், வக்கீல் தனபால் மற்றும் பள்ளி ஆசிரியைகள், ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்