ஓமலூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை போலீசார் விசாரணை

ஓமலூர் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-07-07 22:45 GMT
ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொளசம்பட்டி புதூர் மாரமங்கலம் ஏரி பகுதியில் சுமார் 35 வயதுடைய ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக தொளசம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது தலையில் கல்லால் தாக்கப்பட்டு அந்த நபர் கொலை செய்யப்பட்டு, பிணமாக கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ், துணை சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் ஏரியை சுற்றி உள்ள பகுதியில் மோப்பம் பிடித்து ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பண்ணப்பட்டி மாரக்கவுண்டன்புதூரை சேர்ந்த ரத்தினம் மகன் சுரேஷ் (வயது 35), தொழிலாளி என்பது தெரியவந்தது.

அவருக்கு திருமணம் ஆகி அலமேலு என்ற மனைவியும், காயத்ரி (11), யசோதா (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறுகையில், தொழிலாளி சுரேசை கல்லால் தாக்கி படுகொலை செய்ததற்கான அடையாளமாக தலையில் காயங்கள் உள்ளன. கொலை செய்தவர்கள் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சுரேசின் மனைவி அலமேலுவிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. சுரேஷ் பிணமாக கிடந்த இடத்தில் கொலை நடைபெறவில்லை. வேறு இடத்தில் சுரேஷ் கொலை செய்யப்பட்டு, இங்கு வந்து உடலை மர்ம ஆசாமிகள் போட்டு விட்டு சென்றுள்ளனர் என்று கூறினார்கள்.

இந்த கொலை சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்