தஞ்சை அருகே வயலில் பெண் பிணம் கற்பழித்து கொல்லப்பட்டாரா? போலீஸ் விசாரணை

தஞ்சை அருகே வயலில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-07-08 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்பீட்டர். இவருடைய மனைவி டைனஸ்மேரி(வயது37). கட்டிட தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இரவு நீண்டநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் டைனஸ்மேரியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் வைத்திருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது யாரும் எடுத்து பேசவில்லை.

இந்தநிலையில் திருக்கானூர்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் மோட்டார் அறைக்கு அருகே கிடந்த கட்டிலில் பெண் ஒருவர், மூக்கில் இருந்து ரத்தம் வந்த நிலையில் பிணமாக கிடப்பதாக வல்லம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்த பெண் டைனஸ்மேரி என்பது தெரியவந்தது.

இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வயலுக்கு விரைந்து வந்து டைனஸ்மேரியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

கட்டிட வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்ற டைனஸ்மேரி வயலுக்கு ஏன் சென்றார்? எப்படி இறந்தார்? என்பது மர்மமாக இருந்தது. அவரது உடலில் காயம் உள்ளதா? என்று பெண் போலீசார் பார்த்தனர். அப்போது டைனஸ்மேரியின் மூக்கில் இருந்து ரத்தம் வந்ததுடன், சேலையிலும் ரத்தக்கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டைனஸ்மேரி உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் ஜான்பீட்டர் புகார் அளித்தார். அதில், தனது மனைவி சாவில் மர்மம் உள்ளது. அவர் எப்படி இறந்தார்? என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்கு சென்ற டைனஸ்மேரியை யாராவது கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? வயலுக்கு வந்தபோது டைனஸ்மேரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்