மாணவர்களை பக்குவப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை கருத்தரங்கில் கி.வீரமணி பேச்சு

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் மாணவர்களை பக்குவப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை என கும்பகோணத்தில் நடந்த கருத்தரங்கில் கி.வீரமணி கூறினார்.

Update: 2018-07-08 22:45 GMT
கும்பகோணம்,

திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் யாழ்திலீபன் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டையொட்டி நடந்த கருத்தரங்கிற்கு செயலவை தலைவர் அறிவுக்கரசு தலைமை தாங்கினார்.

இதில் ஆடிட்டர் சண்முகம், பொதுச்செயலாளர் அன்புராஜ், மாநில தலைவர் நேரு, கவிஞர்கள் திவ்யபாரதி, சந்தீப், தமிழருவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திராவிட மாணவர் கழக புத்தகங்களை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட இயக்கத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் மாணவர்களை நெறிப்படுத்தி, பக்குவப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் மாணவர்கள் சரியான பாதையில் தங்கள் மனதை செலுத்த வேண்டும். திராவிட கழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் தான், தற்போது தமிழ்நாட்டில் எழுச்சி மிக்கவர்களாக உள்ளனர்.

அறிவியல் களத்தில் பகுத்தறிவை பயன்படுத்தி கருவிகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். அடிமையாக இருப்பதை விட, அடிமைத்தனத்தை நியாயப்படுத்துவது மிகப்பெரிய குற்றம்.

தமிழ்நாட்டில் தற்போது கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை. சாமி சிலைகளை போலீசார் பாதுகாத்து, காப்பாற்ற வேண்டி உள்ளது.

பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை கொண்டு உருவானது தான் திராவிட கழகம். இதனை இளைய தலைமுறையினர் உணர்ந்து செயல் பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. திருநாராயணபுரம் சாலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதை மாநில அமைப்பாளர் செந்தூரபாண்டியன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பவள விழா மாநாடு நடந்தது. 

மேலும் செய்திகள்