ஆதரவு விலையில் மாம்பழம் கொள்முதல்: சட்டசபையில் மந்திரி சிவசங்கரரெட்டி அறிவிப்பு

ஆதரவு விலையில் மாம்பழம் கொள்முதல் செய்யப்படும் என்று சட்டசபையில் மந்திரி சிவசங்கர ரெட்டி அறிவித்தார்.

Update: 2018-07-09 22:30 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்ட சபையில் நேற்று விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மாம்பழத்திற்கு ஆதரவு விலை வழங்குவதாக அவர் கூறினார். அவர் பேசுகையில், “மாம்பழங்கள் விலை குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக முதல் முறையாக மாம்பழங்களை மாநில அரசே ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. ஒரு கிலோ மாம்பழம் 2 ரூபாய் 50 பைசா என்ற ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும்“ என்றார்.

அப்போது முதல்-மந்திரி குமாரசாமி குறுக்கிட்டு பேசியதாவது:-

இந்த கொள்முதல் மூலம் மாநில அரசுக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை நிதிச்சுமை ஏற்படும். ஆயினும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. மாம்பழங்களின் விலை குறைவால் விவசாயிகள் அவற்றை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தியதை மாநில அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் மாம்பழம் பதப்படுத்தும் மையங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால் கர்நாடகத்தில் 2 இடங்களில் மட்டுமே சிறிய அளவில் உள்ளன. மராட்டிய மாநிலத்தில் மாம்பழம் பதப்படுத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மராட்டிய மாநில அரசுடன் இதுபற்றி நான் பேசி இருக்கிறேன்.

சித்தூரில் மாம்பழம் வருகை அதிகரித்து இருப்பதால், வெளிமாநில மாம்பழத்திற்கு ஆந்திர மாநிலம் தடை விதித்துவிட்டது. இதுதொடர்பாக ஆந்திர முதல்-மந்திரியுடன் பேச முயற்சி செய்தேன். ஆனால் அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். அதனால் பேச முடியவில்லை. ஆந்திராவை போல மாம்பழத்திற்கு ஆதரவு விலையை கர்நாடக அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதனால் மாம்பழ விவசாயிகள் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்