நாங்கள் கொடுத்த வாக்குறுதியை மக்கள் நிராகரித்து விட்டனர் - சட்டசபையில் குமாரசாமி

நாங்கள் கொடுத்த வாக்குறுதியை மக்கள் நிராகரித்துவிட்டனர், அதனால் நாங்கள் சில வரையறைகளுடன் செயல்பட வேண்டி உள்ளது என்று சட்டசபையில் குமாரசாமி கூறினார்.

Update: 2018-07-09 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வந்தது. அந்த விவாதம் 6-ந் தேதியுடன் நிறைவடைந்தது. 9-ந் தேதி இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளிப்பார் என்று சபாநாயகர் அறிவித்தார். அதன்படி கர்நாடக சட்டசபை நேற்று காலை விதான சவுதாவில் கூடியது. சபை கூடியதும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த விவாதத்திற்கு குமாரசாமி பதிலளித்து பேசியதாவது:-

பட்ஜெட்டில் ஹாசனில் வெளிவட்டச்சாலை அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை அரசியல் உள்நோக்கத்துடன் குற்றம் சொல்கிறார்கள். ஹாசன் தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.தான் உள்ளார். இந்த வெளிவட்டச்சாலை வேண்டாம் என்று பா.ஜனதா சொல்லட்டும், அந்த நிதியை வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்க நான் தயாராக இருக்கிறேன்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலத்தில் எந்தெந்த பகுதிகள் வளர்ச்சி அடைந்துள்ளன, எந்ததெந்த பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்து சட்டசபையில் ஒரு வாரம் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இதற்கு சபாநாயகர் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வட கர்நாடகத்தில் என்ன அநீதி ஏற்பட்டுள்ளது என்பது குறித்து நீங்கள் விவாதிக்கலாம்.

விவசாய கடன் ரூ.34 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளேன். இந்த பலன் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். முதல் கட்டமாக இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்தபோதும், யாரும் இதுபற்றி நல்ல முறையில் பேசவில்லை. விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், 12-ந் தேதிக்கு பிறகு வீதியில் இறங்கி போராடுவதாகவும் சொல்லி வருகிறார்கள்.

எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது கர்நாடக மேல்-சபையில் அவர் பேசினார். அப்போது எல்லா கட்சிகளை போல் நாங்களும் ஓட்டுக்காக விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறினோம். ஆனால் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று எடியூரப்பா கூறி னார். தேர்தலுக்கு முன்பு, விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக நாங்கள் சொன்னது உண்மை தான்.

ஆனால் மக்கள் எங்களுக்கு தனிப்பெரும்பான்மையை வழங்கவில்லை. பெரும்பான்மை கிடைத்து இருந்தால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிப்படி 24 மணி நேரத்தில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்து அறிவித்து இருப்போம். எங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் நாங்கள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளோம். கூட்டணியில் நாங்கள் சில வரையறைகளுடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நிராகரித்துவிட்டனர். எங்கள் வாக்குறுதிகளை ஏற்று இருந்தால் 113 தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்திருக்க வேண்டும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

மேலும் செய்திகள்