திருச்சியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 144 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 144 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-09 22:45 GMT
திருச்சி,

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுரு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 3-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் வேலை நிறுத்தம் நீடித்து வருகிறது. திருச்சியிலும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை குவிந்தனர். கோரிக்கைகள் தொடர்பாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மருதுபாண்டியன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் பழனியப்பன் ஆகியோர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அதன்பின் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். இதில் 29 பெண்கள் உள்பட மொத்தம் 144 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பணிக்கு செல்லாததால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

போராட்டம் குறித்து மாநில துணை தலைவர் பழனியப்பன் நிருபர்களிடம் கூறுகையில், “26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12-ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சரை பெருந்திரளாக சென்று சந்தித்து முறையிட உள்ளோம்” என்றார். 

மேலும் செய்திகள்