புனேயில் 11-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை - கணவர் மீது வழக்குப்பதிவு

புனேயில் 11-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-07-09 22:20 GMT
புனே,

புனே ஹடப்சரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்த பெண் மீனாட்சி (வயது46). இவரது கணவர் கிரிஷ் பாண்டே. மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறான். கிரிஷ் பாண்டே வார இறுதி நாட்களில் மும்பையில் இருந்து புனேக்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக மீனாட்சியின் நடத்தையில் கிரிஷ் பாண்டேவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் மனைவியை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.

மகன் கண்முன்னால் வைத்து மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மீனாட்சி சம்பவத்தன்று தான் வசித்து வரும் கட்டிடத்தின் 11-வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கிரிஷ் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்