சீசன் மீண்டும் களை கட்டியது குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலத்தில் சீசன் மீண்டும் களை கட்டியது. நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

Update: 2018-07-10 21:30 GMT

தென்காசி, 

குற்றாலத்தில் சீசன் மீண்டும் களை கட்டியது. நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்.

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த வாரம் சீசன் சுமாராகவே இருந்தது. இந்தநிலையில் கடந்த 8–ந் தேதி இரவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றாலம் சீசன் மீண்டும் களை கட்டியுள்ளது.

சீசன் மீண்டும் களை கட்டியது

குற்றாலத்தில் நேற்று காலை முதலே வெயில் இல்லை. சாரல் மழை விட்டுவிட்டு தூறிக் கொண்டே இருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராகவே இருந்தது. இதனால் அருவிகளில் கூட்ட நெரிசலின்றி சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுந்தது. குற்றாலம் சீசன் மீண்டும் களை கட்டியிருப்பதால் அங்குள்ள வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்