கோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

கோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-10 21:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே குமாரபுரத்தைச் சேர்ந்தவர் உடையார். ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மேரி (வயது 45). இவர் சிவந்திப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

நேற்று காலையில் மேரி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் உடையார் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் உடையாரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

மதியம் வீட்டுக்கு திரும்பி வந்த உடையார் தனது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள், பணம் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணத்தை திருடியவர்களை வலைவீசி தேடி வருகிறார். 

மேலும் செய்திகள்