வங்கியில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் ரூ.90 ஆயிரம் பறிக்க முயற்சி

துறையூரில் பட்டப்பகலில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த பெண்ணை பின் தொடர்ந்து ரூ.90 ஆயிரத்தை பறிக்க முயற்சி நடந்தது. அந்த பெண் பணப்பையை இறுக்கி பிடித்துக்கொண்டதால் மோட்டார் சைக்கிளின் பின்னால் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

Update: 2018-07-10 23:00 GMT
துறையூர்,

துறையூர் அம்மாப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் நேற்று அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்று ரூ.90 ஆயிரம் எடுத்து அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார். அவர் பணம் வைத்திருப்பதை நோட்டமிட்ட 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த நபர் கிருஷ்ணவேணியிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றார். ஆனால், கிருஷ்ணவேணி பணப்பையை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.

இதனால், அவர் வங்கியின் முன்பக்க சாலையில் இருந்து திருச்சி மெயின் பிரதான சாலை வரை சிறிது தூரம் தர, தர வென இழுத்து செல்லப்பட்டார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அருகில் இருந்தவர்கள் கூச்சல் போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்