குடிநீர் கேட்டு ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்

கொத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2018-07-11 22:45 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் குடிநீர்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் கட்டப்பெரியான் குடியிருப்பு பகுதிக்கு கடந்த பல நாட்களாக குடிநீர் வழங்கும் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்தது.

இதனால் குடிநீர் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பிடித்து வந்தனர். இருப்பினும் குடிநீர் தட்டுப்பாடு தீரவில்லை. இதனால் முறையான குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஒன்றிய அதிகாரி மணிமேகலை, கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் மற்றும் கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்