பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி

பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்த நண்பர்கள் 2 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-07-11 21:53 GMT
பூந்தமல்லி,


பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் அங்காள பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). பூந்தமல்லி குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் முரளி (29). நண்பர்களான இவர்கள் இருவரும் ஏ.சி. மெக்கானிக் ஆவர்.

கடந்த 8-ந் தேதி இரவு நண்பர்கள் இருவரும் வேலை முடிந்து ஒரே மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லியை அடுத்த அய்யப்பன்தாங்கல், ஆயில்மில் ரோடு வழியாக அவர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், 2 பேரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.


பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அஜித்குமார், முரளி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்