பொருட்கள் வாங்கிய விவரங்கள் பெற ரேஷன் கடைகளில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டும் மாவட்ட நிர்வாகம் தகவல்

பொருட்கள் வாங்கிய விவரங்கள் பெற ரேஷன் கடைகளில் செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2018-07-12 22:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 1.11.2016 முதல் தமிழக அரசால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன்படி ரேஷன்கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,094 ரேஷன்கடைகள் முழுவதும் கணினி மயமாக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விற்பனை முனைய எந்திரம் வழங்கப்பட்டு, அதில் ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் எண், செல்போன் எண் மற்றும் இதர விவரங்கள் பதிவு செய்து விற்பனை முனைய எந்திரத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட் கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முறையில் விற்பனை செய்யும் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வாங்கிய அனைத்து விவரமும், ரேஷன் கார்டுதாரர்களால் வழங்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி உடனுக்குடன் அனுப்்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் போலி விற்பனை மேற்கொள்வது தவிர்க்கப்படும்.


தற்போது ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் மூடப்பட்டு பல ரேஷன்கார்டுதாரர்கள் வேறு செல்போன் எண்ணிற்கு மாறியுள்ளதாலும், சில ரேஷன்கார்டுதாரர்களின் செல்போன் எண்கள் தவறாக உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடைகளில் குடிமைப் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் ரேஷன்கார்டுடன் இணைத்துள்ள தவறான செல்போன் எண்களை சரி செய்ய வேண்டும்.

மேலும் செல்போன் எண்ணை வேறு எண்ணிற்கு மாற்றியவர்கள் தாங்கள் புதிதாக பயன்படுத்த கூடிய செல்போன் எண்ணை ரேஷன் கடைகளில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். செல்போன் எண்ணை இதுவரை ரேஷன் கடைகளில் வழங்காதவர்கள் அதை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்