பாம்பன் கடலில் புதிய ரோடு பாலம் அமைக்க பாம்பன், மண்டபம் கடற்கரை பகுதியில் மண் பரிசோதனை

பாம்பன் கடலில் புதிய ரோடு பாலம் அமைக்க கடற்கரை பகுதியில் மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Update: 2018-07-12 23:15 GMT
ராமேசுவரம்,

நாட்டின் புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக வந்து செல்கின்றனர். இவர்கள் ராமநாதபுரம் வந்து அங்கிருந்து உச்சிப்புளி, வேதாளை, மண்டபம் வந்து அங்கிருந்து கடலில் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் வழியாக ராமேசுவரம் வந்து, மீண்டும் அதே வழியாக அனைத்து வாகனங்களும் திரும்பி செல்கின்றன.

ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்குவழிச்சாலையாக மாற்றியமைக்க பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதுபோல் ராமநாதபுரம்-ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே சுமார் ரூ.650 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதுடன், அதற்கான சர்வே பணிகளும் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச் சாலை வரவுள்ளதால் பாம்பன் கடலில் மேலும் புதிதாக ஒரு ரோடு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் தோணித்துறை கடற்கரை பகுதியில் நேற்று சென்னையில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளர்கள் மண் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் தோணித்துறை கடலை ஒட்டிய கடற்கரை பகுதியில் நேற்று ஆழ்துளை எந்திரம் மூலம் பூமிக்கடியில் துளையிட்டு மண்ணை பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது. சுமார் 90 அடி வரையிலான ஆழத்தில் துளையிடப் பட்டு 5 அடிக்கு ஒரு முறை மண் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது. பூமிக்கடியில் எவ்வளவு தூரம் வரை மண் உள்ளது. அதன் பிறகு எத்தனை அடியில் பாறை உள்ளது. மண்ணின் உப்புத் தன்மை போன்ற ஆய்வு நடைபெற்றதாக ஆய்வு செய்தவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல மண்டபம் தோணித்துறை வடக்கு பகுதியின் சாலை ஓரத்தில் மண் பரிசோதனை செய்யும் ஆய்வு பணி நடைபெற்றது. அடுத்த கட்டமாக இதே மண் ஆய்வு பணி பாம்பன் கடற்கரை பகுதியில் நடைபெறுகிறது. பாம்பன் பகுதியில் கடலில் ஏற்கனவே ஒரு பாலம் உள்ளதாலும், நான்கு வழிச்சாலைக்காக, மேலும் ஒரு புதிய பாலம் கட்டுவதற்காக இந்த ஆய்வு நடை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்