காதலியை கொலை செய்த கடற்படை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

காதலியை கொலை செய்த கடற்படை அதிகாரிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

Update: 2018-07-13 00:12 GMT
மும்பை,

இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர் மனிஷ் தாக்கூர். இவருக்கு கடந்த 2005-ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து கவுசாம்பி(வயது24) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். அந்த பெண்ணை மனிஷ் தாக்கூர் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்ததை அடுத்து, கவுசாம்பி அவருடனான பழக்கத்தை துண்டித்தார்.

இந்தநிலையில், கடைசியாக இருவரும் சந்தித்து பேசி கொள்ளலாம் என கூறி, கவுசாம்பியை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மனிஷ் தாக்கூர் வரவழைத்து கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு மே 12-ந்தேதி நடந்தது.

இந்த கொலை வழக்கில் மும்பை செசன்ஸ் கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தண்டனையை எதிர்த்து மனிஷ் தாக்கூர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, அவர் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு கூறிய ஐகோர்ட்டு, மனிஷ் தாக்கூருக்கு செசன்ஸ் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு கூறியது. 

மேலும் செய்திகள்