மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் கட்டுமான பணி தேசிய சுகாதார இயக்கக திருச்சி மண்டல இயக்குனர் ஆய்வு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் நடைபெற்ற கட்டுமான பணியை தேசிய சுகாதார இயக்கக திருச்சி மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2018-07-13 23:30 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டத்திற்கு தேசிய சுகாதார இயக்கக திருச்சி மண்டல இயக்குனர் தாரிஸ்அகமது நேற்று வருகை தந்தார். அப்போது மண்டல இயக்குனர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் அலுவலர்களுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு தாய்-சேய் நல பிரிவில் 5 தளங்களில் 255 படுக்கை வசதிகளுடன் ரூ.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கட்டிட கட்டுமான பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்திற்குள் கட்டிட பணிகளை முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் ராஜ்மோகன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர், அரசு மருத்துவமனைக்கு மேலும் 2 டயாலிசிஸ் எந்திரங்களை வழங்க உத்தரவிட்டார். அந்த எந்திரங்கள் வந்தவுடன் விரைவில் தமிழ்நாடு விபத்து ஆரம்ப நிலை மற்றும் அவசர நிலை சிகிச்சை பிரிவை தொடங்க உத்தரவிட்டார்.

அப்போது அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்கு தேவையானவை குறித்து நாகை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி (பொறுப்பு) டாக்டர் வீரசோழன், தேசிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜாராம் ஆகியோருடன் மண்டல இயக்குனர் கலந்து ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார்.


மேலும் செய்திகள்