அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் ஆலோசனை

வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது குறித்து அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-07-13 21:45 GMT
விழுப்புரம்,


இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதாவது 11 தொகுதிகளிலும் கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடியில் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களும், நகர்புறங்களில் 1,400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்ததன் மூலம் 3,223 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது திண்டிவனம் (தனி) தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், விழுப்புரம் தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும், திருக்கோவிலூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும் என 4 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. அதுபோல் 77 வாக்குச்சாவடிகள் இடமாற்றமும், 15 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டார். அப்போது இந்த பட்டியலை இறுதி செய்வதற்கு முன்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அனைத்துக்கட்சியினர் கருத்து தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வது குறித்து அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். இவர்கள், ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் ஆட்சேபனை ஏதும் இல்லை என்று தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்