அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-13 22:00 GMT
திருத்துறைப்பூண்டி,


திருத்துறைப்பூண்டியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் தண்டலச்சேரியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, இந்த ஆண்டு முதல் அங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூாயில் குடிநீர் வசதி, மின்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கல்லூரியில் கூடுதல் மாணவர்கள் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், கல்லூரியில் மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்