திருப்பதி கோவிலுக்கு சென்றபோது விபத்து: வேன் கவிழ்ந்து 22 பேர் படுகாயம்

வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-07-14 22:30 GMT
ஆம்பூர்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 25 பேர் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரை கடந்து பச்சகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த அனைவரும் விபத்தில் சிக்கி கொண்டனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வேனுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வேடசந்தூர் தாலுகா, ராடசமுத்திரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 29), பிரவீன் (22), ராமகிருஷ்ணன் (42), பழனியம்மாள் (32), இந்திராணி (50), பிரகாஷ் (19), விஜயராஜ் (26) உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்