சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை வேப்பனப்பள்ளியில் பரபரப்பு

வேப்பனப்பள்ளியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-16 23:45 GMT
வேப்பனப்பள்ளி,


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் லட்சுமிபுரம் தெரு உள்ளது. இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குடிநீருக்காக அருகே உள்ள பகுதிகளுக்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.


இந்த நிலையில் நேற்று 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது லட்சுமிபுரம் தெருவிற்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்