நாமக்கல் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 356 மனுக்கள் குவிந்தன 18 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 356 மனுக்கள் குவிந்தன. இதில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

Update: 2018-07-16 23:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 356 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தொழில்நெறி மற்றும் திறன் வாரவிழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, ஸ்லோகன்போட்டி, வினாடி-வினா போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும்் வழங்கினார். மொத்தம் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்