ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இயக்குனர் கவுதமன் கூறினார்.

Update: 2018-07-18 23:00 GMT
அரியலூர்,

ஜல்லிக்கட்டு போராட்டம், ஐ.பி.எல். போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் இறுதி சடங்கின் போது பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இயக்குனர் கவுதமன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் அரியலூர் போலீஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை என இருவேளையிலும் மறு உத்தரவு வரும் வரை கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து இயக்குனர் கவுதமன் நேற்று அரியலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து கையெழுத்து போட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சொல்ல முடியாத அளவுக்கு ஊழல்கள் செய்து சட்டத்தின் பிடியில் மாட்டி உள்ளனர். முதல்–அமைச்சர் எடப்பாடி உறவினர் என்று சொல்லப்படுகின்ற நெடுஞ்சாலை துறை ஒப்பந்தக்காரர் வீட்டில் வருமான வரி சோதனையில் ரூ.100 கோடிக்கு மேல் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணமும் நகையும் எப்படி ஒரு இடத்தில் இருக்க முடியும். முதல்–அமைச்சரின் உறவினர் என சொல்லப்படும் பட்டசத்தில், இக்குற்றங்களுக்கு யார் பொறுப்பேற்பது. மேலும், துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றமே ஏன் சி.பி.ஐ. விசாரிக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. எனவே ஊழல் கறைபடிந்துள்ள இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, சட்டத்தின் முன் நின்று இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களா இல்லையா என நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்