கடன் வாங்கியவரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

காரைக்குடியில் கடன்வாங்கியவரை கடத்தி கொலைமிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-18 22:45 GMT
காரைக்குடி,

காரைக்குடி அழகப்பாபுரம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த உதயம் நகரில் வசித்து வருபவர் சுரேஷ்(வயது40). இவர் தனது வீட்டின் அருகே வசித்து வரும் தாமுவேல் என்பவரிடம் தன்னுடைய மகனின் மருத்துவ செலவிற்காக கடனாக 14 பவுன் தங்க நகையை வாங்கி அதை அடமானம் வைத்து அந்த பணத்தின் மூலம் தனது மகனிற்கு சிகிச்சையை மேற்கொண்டார். அதன் பின்பு தான் வாங்கிய 14 பவுன் தங்க நகையில் இருந்து 4பவுன் நகையை திருப்பி சுரேஷ் கொடுத்துள்ளார்.

மீதமுள்ள 10பவுன் தங்க நகையை திருப்பி கொடுக்கவில்லையாம். இது குறித்து தாமுவேல், கேட்டபோது அதற்கு சுரேஷ் சரி வர பதில் கூறவில்லையாம். சம்பவத்தன்று சுரேஷ் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த தாமுவேல் தலைமையிலான ஒரு கும்பல் அவரை ஆட்டோவில் கடத்தி சென்று அங்கு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாம்.


இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் தாமுவேல், சுப்பு உள்பட 6 பேரையும் காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்