மணவாளக்குறிச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-19 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அனஞ்சபெருமாள். இவரது மகள் ஐஸ்வரியா (வயது 15). இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். அதில் தோல்வி அடைந்ததால் மிகுந்த மன வருத்தமடைந்தார். அவரை பெற்றோரும், உறவினர்களும் தேற்றினர். அத்துடன், தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுத முயற்சி மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.

ஆனால், தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த சில நாட்களாக ஐஸ்வரியா யாருடனும் அதிகம் பேசாமல் இருந்துள்ளார். அத்துடன் எந்த செயலிலும் ஈடுபாடின்றி சோகத்துடன் காணப்பட்டார்.

சம்பவத்தன்று மாலை வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்றிருந்தனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வரியா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அனஞ்சபெருமாள், மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்