திருமணம் செய்த 4 மாதத்தில் பெண்ணுக்கு வெட்டு: கணவன் கைது

திருமணம் செய்த 4 மாதத்தில் பெண்ணை பிளேடால் வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-23 23:38 GMT
வேலூர்,

வேலூரில் திருமணம் செய்த 4 மாதத்தில் பெண்ணை பிளேடால் வெட்டிய கணவனை போலீசார் கைதுசெய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் வடிவேலன் (வயது 40). இவர் நாய்க்குட்டிகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், மதன் (14) என்ற மகனும், ருஷிதா (12) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணான பிரியா மகாலட்சுமி (40) என்பவரை குற்றவழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு உதவி செய்வதற்காக வடிவேலன் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட் டுள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரியா மகாலட்சுமியை, வடிவேலன் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

அதே ஊரில் பிரியா மகாலட்சுமியை தங்க வைத்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் அவரை வேலூர் வள்ளலாரில் வாடகைக்கு வீடுபார்த்து தங்க வைத்துள்ளார். அவருடன் தாயாரும் தங்கியிருந்தார். 10 நாட்களுக்கு ஒரு முறை வடிவேலன் வேலூருக்கு வந்து பிரியா மகாலட்சுமியை பார்த்து சென்றுள்ளார். அதன்படி சம்பவத்தன்று வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தான்கட்டிய தாலியை கழற்றிக்கொடு என்று வடிவேலன் கேட்டுள்ளார். இதனால் பிரியா மகாலட்சுமியும், அவருடைய தாயாரும் சேர்ந்து, வடிவேலனை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த வடிவேலன், பிரியா மகாலட்சுமியின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார். இதில் தலையின் முன்பகுதியில் உள்ள முடி கொத்தாக வடிவேலன் கையில் வந்துவிட்டது.

அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காமல் பிளேடால் பிரியா மகாலட்சுமியின் தலையில் வெட்டி உள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரியா மகாலட்சுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பிரியாமகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்