புதுவை மாநிலம் முழுவதும் ஒப்பந்த தொழிலாளர் முறையை தடை செய்ய வேண்டும், மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட் வலியுறுத்தல்

புதுவை மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் ஒப்பந்த தொழிலாளர் முறையை அரசு தடை செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-08-05 22:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) மாநில செயலர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி மாநிலத்தில் தொழிற்பேட்டையில் நடைபெற்று வரும் மோசமான சுரண்டல் வடிவமான அரை அடிமை, கட்டாய வேலை, ஒப்பந்த தொழிலாளர் முறையில் கொழிக்கும் பணமே தொடர் கொலைகளுக்கு காரணமாகிறது.

ஆலை அதிபர்கள் ஒட்டுமொத்த உற்பத்தியையும், லேபர் காண்டிராக்டர் முறையில் செய்து கொழுத்த லாபம் சம்பாதிக்கின்றனர். இதில் லேபர் காண்டிராக்டர்களாக உள்ளூர் ரவுடிகள், அரசியல்வாதிகள், தொழிலாளர் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் துணையுடன் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதில் கொழிக்கும் உபரியே ஈவு இரக்கமற்ற கொலைகளுக்கு காரணம்.

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏ.ஐ.சி.சி.டி.யு.) பலமுறை அரசுக்கு தெரிவித்தும், கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது. தற்போது தமிழகப் பகுதியில் நடந்த காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஜோசப் கொலைக்கு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் ஒப்பந்த தொழிலாளர் முறையை அரசு தடை செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிப்பு ஆலோசனை கமிட்டியை உடனடியாக கூட்டவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்