குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை: கணவருக்கு தீக்காயம்

சிதம்பரம் அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

Update: 2018-08-06 21:30 GMT

சிதம்பரம்,


சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவரது மனைவி கற்பகவள்ளி(40). இவர்களுடைய மகன் ராபின்(18). கணவன்– மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன், மீன் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜேந்திரனுக்கும் கற்பகவள்ளிக்கும் இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கற்பகவள்ளி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், கற்பகவள்ளி மீது எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீ பரவி எரிந்தது. இதில் இருவரும் வலியால் அலறி துடித்தனர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ராஜேந்திரன், கற்பகவள்ளி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இருவரும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு கற்பகவள்ளி பரிதாபமாக இறந்தார்.

ராஜேந்திரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராபின் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்