செல்போன் எண் கேட்டு வாலிபர் தொந்தரவு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் எண் கேட்டு வாலிபர் தொந்தரவு செய்ததால் மனம் உடைந்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-08-06 23:15 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை அருகே உள்ள சி.ஜி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செயன். விவசாயி. இவருடைய மகள் காமாட்சி(வயது 18). இவர், நேற்று முன்தினம் தங்களது வயலில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது சஞ்சீவிபுரம் கிராமத்தைச்சேர்ந்த வேலு என்பவருடைய மகன் சத்யா(20) என்பவர் தனது நண்பர்கள் 2 பேருடன் அங்கு வந்தார். காமாட்சியிடம் அவர், தான் உன்னை காதலிப்பதாகவும், உனது செல்போன் எண்ணை தரும்படியும் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் சத்யாவை கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்யா நேற்று முன்தினம் மாலை மீண்டும் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலருடன் காமாட்சி வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. இதை அவமானமாக கருதிய காமாட்சி, திடீரென தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சத்யா மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்