ஒழுங்காக சமையல் செய், வீட்டு வேலை செய் என்று கூறுவதால் கணவர் மனைவியை மோசமாக நடத்துகிறார் என கூறமுடியாது

ஒழுங்காக சமையல் செய் என்றுகூறுவதால் கணவர் மனைவியை மோசமாக நடத்துகிறார் என கூறமுடியாது என்று மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கூறியுள்ளார்.

Update: 2018-08-06 23:08 GMT
மும்பை,

சாங்கிலியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விஜய் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட்டு விஜயை விடுதலை செய்தது.

இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரணை யில் விஜய் ஒழுங்காக சமையல் செய்யுமாறும், வீட்டு வேலைகளை செய்யுமாறும் மனைவியை திட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதேபோல விஜய்க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சாரங் கோட்வால் ‘‘கணவர் மனைவியை ஒழுங்காக சமையல் செய், வீட்டு வேலை செய் என கூறுவதால் அவளை அவர் மோசமாக நடத்துகிறார் என கூறமுடியாது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை செய்த பெண்ணை துன்புறுத்தினார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை’’ என்று கூறி வழக்கில் இருந்து விஜயை விடுவித்த கீழ் கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்தார்.

மேலும் செய்திகள்