ஏ.எப்.டி., சுதேசி–பாரதி மில்களை புனரமைத்து இயக்க வேண்டும், தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

ஏ.எப்.டி., சுதேசி மற்றும் பாரதி மில்களை புனரமைத்து இயக்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

Update: 2018-08-07 00:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி ஏ.எப்.டி., சுதேசி, பாரதி மில்களை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மில்களின் தற்போதைய நிலை குறித்து அறிய அரசு சார்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயன் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. அவர் அந்த மில்களை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், ஏ.எப்.டி. சுதேசி, பாரதி மில்களின் நிர்வாக இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள், ஏ.எப்.டி, சுதேசி, பாரதி மில்களை மூடக்கூடாது, அதனை புனரமைத்து முழுமையாக இயக்க வேண்டும். 2013–ம் ஆண்டு முதல் ஏ.எப்.டி. மில்லில் இதுவரை 990 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். சுதேசி, பாரதி மில்லில் 155 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணிக்கொடை மற்றும் இதர நிலுவை தொகையும் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களில் பலர் பணிக்கொடை பெறாமல் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதலில் பணிக்கொடை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்