கருணாநிதி மரணத்தால் அதிர்ச்சி: மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் சாவு

கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியால் மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் உயிர் இழந்தார்.

Update: 2018-08-08 23:15 GMT
சென்னை,

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சிறுவயது முதலே தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டிருந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் பரசுராமன் சோகத்துடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதால் பரசுராமன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து, கண்ணீர் விட்டு அழுதார்.

அவருடைய குடும்பத்தினர் அவரை ஆறுதல்படுத்தி உள்ளனர். இருந்தபோதிலும் பரசுராமன் சோகமாகவே இருந்தார். நேற்று முன்தினம் மாலை கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் பரசுராமன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பரசுராமனுக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கருணாநிதி மரணமடைந்த செய்தியை கேட்டு ஏற்கனவே தி.மு.க. தொண்டர்கள் 6 பேர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்