ஆபத்தான அதிக பாரம்!
வியட்நாம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்து பார்க்கும் ஒரு விஷயம் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களைத்தான்.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் இதைத்தான், இவ்வளவுதான் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியை எல்லாம் பின்பற்றாமல் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்குள் நீந்திச் செல்லும் வளர்ப்பு மீன்கள், பலூன்கள், ராட்சத டியூப்கள், பறவைக் கூண்டுகள், விநியோகிக்க வேண்டிய பொருட்கள், மரங்கள், பூச்செடிகள், காய்கறிகள், குளிர்பான பாட்டில்கள் என்று அளவுக்கு அதிகமான சுமைகளுடன் வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள்.
ஓட்டுபவருக்கு வசதியாக இந்தப் பயணம் இருப்பதில்லை. வண்டியின் பெரும் பகுதியைச் சரக்குகளே ஆக்கிரமித்து விடுகின்றன. ஆனாலும் சர்வசாதாரணமாக வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். வியட்நாமில் கார், சரக்கு வாகனங்களின் விலை அதிகம் என்பதால் எல்லோரும் இரண்டு சக்கர வாகனங்களையே, சரக்கு வண்டிகளாக பயன்படுத்துகிறார்கள். அதனால் சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது. எப்பொழுதும் வாகனங்கள் அலறிக்கொண்டு ஓடுவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும்போதே அதிக விபத்துகளைச் சந்திக்கிறார்கள்.