பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது தண்டவாளத்தை மாற்றி அமைக்க முடிவு

மின்சார ரெயில் விபத்தில் 5 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது தண்டவாளத்தை மாற்றி அமைக்க ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2018-08-09 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில், கடந்த மாதம் 24-ந் தேதி சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு சென்ற மின்சார ரெயில் 4-வது நடைமேடையில் சென்றபோது பக்கவாட்டில் இருந்த தடுப்பு சுவரில் மோதி ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். முன்னதாக 23-ந் தேதியும் அதே இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், பரங்கிமலை ரெயில் நிலைய 4-வது நடைமேடை அருகே உள்ள தடுப்பு சுவரை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம் 30-ந் தேதி ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அப்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்திய பொதுமக்கள், பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடை வழியாக தென்மாவட்டங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும்போது இடையூறாக உள்ள தடுப்பு சுவர்களையும் அகற்றும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த 6-ந் தேதி பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார், 4-வது நடைமேடையில் இடையூறாக இருந்த தடுப்பு சுவரை சுமார் 30 அடி நீளத்துக்கு இடித்து அகற்றினர்.

ஆனால் 5 பேர் உயிரை பலி வாங்கி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் உள்ள தடுப்பு சுவரை அகற்றுவது சாத்தியம் இல்லை என்பதால், அதற்கு பதிலாக நடைமேடையின் முன்புறம் தண்டவாளம் அருகே உள்ள சுவரை உடைத்து, 4-வது தண்டவாளத்தை சில அடி தூரம் வரை தள்ளி அமைத்தால் இதுபோல் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.

இதற்காக 4-வது தண்டவாளத்தில் நடைமேடை ஓரம் உள்ள ஜல்லி கற்கள் அகற்றப்பட்டு நடைமேடையில் கொட்டப்பட்டு உள்ளது. விரைவில் 4-வது தண்டவாளம் மாற்றி அமைக்கப்படும் என ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்