மக்கள் தொகை பதிவேடுகளை மேம்படுத்துதல் பயிற்சி வகுப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேடுகளை மேம்படுத்துதல் பயிற்சி வகுப்பை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-08-09 23:06 GMT
வேலூர்,



தேசிய மக்கள் தொகை பதிவேடுகளை மேம்படுத்துதல் பணிகளுக்கான பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கடந்த 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய தேசிய மக்கள் தொகை பதிவேடுகளை களப்பணி மூலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தற்போது தனிநபர் விவரங்கள் அடங்கிய கணக்கெடுப்பாளர் பகுதி வாரியாக புத்தகத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கு தாசில்தார்கள், மாநகராட்சி மண்டல அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் ஆகியோர் பொறுப்பு அலுவலர்கள் ஆவார்கள். மேலும் இந்த பணியை மேற்பார்வை செய்ய ஒவ்வொரு அலுவலகத்திலும் மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 261 நுகர்வோர் தொகுதிகள் உள்ளது. அவற்றுக்கு மேற்பார்வையாளராக துணை தாசில்தார்கள் மற்றும் உதவியாளர் நிலையில் 54 நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல்களை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. எனவே, அதற்கு வசதியாக அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக துணை இயக்குனர் (சென்னை) ஞானசேகரன் கலந்துகொண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடுகளை மேம்படுத்துதல் குறித்து பயிற்சி அளித்தார்.

இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சண்முகம் (பொது), நாராயணன் (தேர்தல்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்