பெண்ணை கொன்று நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை

கற்பழித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை கொலை செய்து விட்டு, நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2018-08-10 22:47 GMT
தானே,

தானே கல்யாண் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பண்டாரி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு பெண் ஒருவரை கற்பழித்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர், தான் கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று திடீரென மனைவியின் உறவினர்களிடம், மனைவி தன்னுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும், எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை தேடிவந்தனர். இந்தநிலையில் மாயமான பெண் பிவண்டி, யேவாரி கிராமத்தில் உள்ள முட்புதரில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், மகேஷ் பண்டாரி தான் மனைவியை கொலை செய்து உடலை அங்கு வீசியதும், பின்னர் ஒன்றும் தெரியாதவர் போல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து மகேஷ் பண்டாரியை போலீசார் கைது செய்தனர்.

இவர் மீதான வழக்கு தானே கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை மாவட்ட நீதிபதி ஜதாவ் விசாரித்தார்.

இறுதி விசாரணை முடிந்து அவர் அளித்த தீர்ப்பில், “கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் கொலையில் சம்பந்தப்படாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் அவர் கொலைக்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.

எனவே மகேஷ் பண்டாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்குகிறேன். மேலும் ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்” என தனது தீர்ப்பில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்