சமையல் செய்தபோது தீயில் கருகி மாணவி சாவு

மதுரையில் சமையல் செய்தபோது தீயில் கருகி மாணவி இறந்துபோனார். இதுபோல் மற்றொரு சம்பவத்தில் மூதாட்டியும் இறந்தார்.

Update: 2018-08-10 22:49 GMT

மதுரை,

மதுரை எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள கூலாப்பாண்டி திருமால்நகரை சேர்ந்தவர் பால்சாமி. இவருடைய மகள் ஆர்த்தி (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையில் இருந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்துபோனார். இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மதுரை ஆண்டார் கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன். இவருடைய மனைவி குருவம்மாள் (68). இவருக்கு கால் வலி இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மகன் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்