பணகுடி அருகே கன்டெய்னர் லாரி மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற 2 விவசாயிகள் பலி

பணகுடி அருகே, கன்டெய்னர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 விவசாயிகள் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் கோவில் கொடை விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.

Update: 2018-08-11 23:00 GMT
பணகுடி,

நெல்லை மாவட்டம் களக்காட்டை அடுத்துள்ள மஞ்சுவிளை வடகரையை சேர்ந்த நடராஜன் என்பவருடைய மகன் மணிகண்டன் (வயது 32), அதே ஊரை சேர்ந்த மேகநாதன் மகன் முருகபெருமாள் (30). இவர்கள் 2 பேரும் விவசாயிகள். நேற்று முன்தினம் இரவில் பணகுடி அருகே கலந்தபனையில் நடந்த கோவில் கொடை விழாவை பார்த்து விட்டு இருவரும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மணிகண்டன் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

தெற்கு வள்ளியூர் பஸ்நிறுத்தம் அருகே நான்கு வழிச்சாலையில் வடக்கு நோக்கி சென்றபோது எதிரே நாகர்கோவிலை நோக்கி சிமெண்டு பாரம் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியும், அவர்களது மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் மணிகண்டன், முருகபெருமாள் ஆகிய இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் மகன் பட்டாணி (36) என்பவரை கைது செய்தனர். விபத்தில் சிக்கி பலியான முருகபெருமாளுக்கு திருமணம் முடிந்து மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கோவில் கொடை விழாவை பார்த்து விட்டு வீடு திரும்பியபோது, லாரி மோதி 2 பேர் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்