மண்வள அட்டையின் பரிந்துரையின்பேரில் தான் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படும் கலெக்டர் தகவல்

மண்வள அட்டையின் பரிந்துரையின் பேரில்தான் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படும் என கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-08-11 22:15 GMT
கரூர்,

மண்வள அட்டை திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவியோடு கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது. அப்போது விவசாயிகளின் வயல்களில் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மண் ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின்கீழ், முதல் சுழற்சியில் 1 லட்சத்து 46 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2-ம் சுழற்சியில் இதுவரை 78 ஆயிரத்து 812 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

2018-19-ம் ஆண்டு அடுத்த கட்டமாக மண்வள அட்டை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உர பரிந்துரையின்படி பயிருக்குத் தேவையான உரம் இடுவதால் உரச்செலவு குறைவதோடு மண்வளமும் பாதுகாக்கப்படுகின்றது. சமச்சீரான உரம் இடுவதன் மூலம் மகசூல் கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். எனவே வருகிற காலங்களில் மண்வள அட்டையின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே, விவசாயிகள் விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை முனைய கருவி மூலம் உரங்கள் பெற்றிட திட்டமிடப்பட்டு வருகிறது.

எனவே ஒவ்வொரு விவசாயியும் தங்களுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டை வைத்திருப்பதுபோல, மண்வள அட்டையினையும் பாதுகாப்பாக வைத்திருத்தல் மிகவும் அவசியமானதாகும். மண்வள அட்டை உபயோகத்தினை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மத்தியிலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில், நடப்பு ஆண்டில் 3 வட்டாரங்களில் உள்ள 3 கிராமங்களில் மண்வள அட்டையின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகள் உரங்களை விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை முனைய கருவி மூலம் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மண்வள அட்டையை பெற்று அதன் பயன்பாட்டினை அறிந்து மண்வள அட்டையின் அடிப்படையிலேயே உரமிட்டு, மண்வளம் காத்து அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு அவர்அதில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்