திண்டுக்கல் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

திண்டுக்கல் அருகே விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-08-11 22:30 GMT
சின்னாளபட்டி,

சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டி ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 44). பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி செலின் ஜெயராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி செலின் ஜெயராணி என்.பஞ்சம்பட்டியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.

கிறிஸ்துராஜுக்கு பணியில் இருந்த போது அவரது தோள்பட்டையில் வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் தோள்பட்டையில் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். மற்றொரு அறுவை சிகிச்சை செய்தால் உடலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் என்றும், அதனால் அறுவை சிகிச்சை வேண்டாம் என்றும் கிறிஸ்துராஜ் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே விடுமுறைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்துராஜ் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து என்.பஞ்சம்பட்டி வந்தார். அங்கு அவருக்கு மீண்டும் தோள்பட்டையில் வலி ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த கிறிஸ்துராஜ் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டார். மதிய சாப்பாட்டிற்காக செலின் ஜெயராணி கடையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது கிறிஸ்துராஜ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்