விருத்தாசலம் அருகே ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பலி

விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற போது, ரெயில் மோதி ரெயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-08-11 23:24 GMT

விருத்தாசலம்,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பப்லு (வயது 30). இவர் லால்குடியில் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் லால்குடி அருகே உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று காலை பப்லு, லால்குடி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் வேலையை முடித்து விட்டு, தண்டவாளத்தின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் விருத்தாசலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பப்லு மீது மோதியது.

இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான பப்லு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்