யானைகள் தினத்தை கும்கி யானைகளுடன் கொண்டாடிய கிராம மக்கள்

யானைகள் தினத்தையொட்டி கும்கி யானைகளுக்கு கிராம மக்கள் உணவு பொருட்கள் வழங்கி கொண்டாடினர்.

Update: 2018-08-12 21:30 GMT
தேவாரம், 


தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக காட்டுயானை ஒன்று விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என 7 பேரை அடித்து கொன்றது. தொடர் அட்டகாசம் செய்யும் இந்த காட்டுயானையை பிடிக்க கோவை மாவட்டம் டாப்சீலிப் பகுதியில் இருந்து கலீம், மாரியப்பன் ஆகிய 2 பயிற்சி பெற்ற கும்கி யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவாரத்துக்கு அழைத்து வரப்பட்டது.

ஆனால் கும்கி யானைகள் வந்ததை அடுத்து காட்டுயானை கேரள வனப்பகுதிக் குள் சென்றது. அந்த காட்டுயானையை வனத்துறையினர் 2 குழுவாக பிரிந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று யானைகள் தினம் என்பதால் கும்கி யானைகளான கலீம், மாரியப்பனை குளிப்பாட்டி அங்குள்ள சவுடம்மன்கோவில் களத்துக்கு கொண்டு வரப்பட்டன. மக்களை காக்க வந்த கும்கி யானைகளை பார்க்க அந்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

மாவட்ட வன அலுவலர் கவுதம், யானைகள் தினம் குறித்தும், யானைகளின் மாண்பு குறித்தும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். இதையடுத்து கும்கி யானை மாரியப்பன் ஒரு காலை தூக்கிவைத்து கொண்டு மைதானத்தை சுற்றி வந்து சாகசம் செய்தது. இதை கண்ட பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து கலீம் யானை முன்கால்களை மடக்கி தரையில் படுத்தபடி பொதுமக்களை வரவேற்பு செய்தது. பின்னர் 2 கால்களை தூக்கி பிளிறியது. யானைகளின் சாகசங்களை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் யானைகளுக்கு சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

விழாவில் கும்கி யானைகளுக்கு பொதுமக்கள் வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட உணவு பொருட்களை கொடுத்தனர். காட்டுயானையை பிடிக்க வந்த கும்கி யானைகளுடன் உற்சாகமாக பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

மேலும் செய்திகள்