காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதிகளை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டார்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர பகுதிகளை கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டார்.

Update: 2018-08-12 23:49 GMT
ஈரோடு,

மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் கரையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் உள்ள மண்பாதையை மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையோரம் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மேட்டூர் ஆணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் இருக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் இருக்கக்கூடிய 18 வருவாய் கிராமங்களில் நேற்று (நேற்று முன்தினம்) முதல் வருவாய்த்துறை, போலீஸ் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சித்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

மேலும் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டும், தண்டோரம் மூலமும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரியில் 2 கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. பவானி பகுதியில் 27 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்கு இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக எந்தவித பொருட்சேதமும் ஏற்படவில்லை. அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்து வருகிறார்.

கொடுமுடி பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 60 குடும்பத்தினர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து பகுதியிலும் அதிகாரிகள் விழிப்புடன் இருந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் காவரி கரையோரம் இருக்கக்கூடிய வீடுகளுக்குள் இன்னும் தண்ணீர் செல்லவில்லை. 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் பட்சத்தில் அந்த வீடுகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. அவர்களுக்கும் தேவையான அறிவுரைகள் கூறப்பட்டு வருகிறது. ஆற்றங்கரையோரம் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவேண்டும் என்று தமிழக முதல் -அமைச்சர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே ஆணையிட்டுள்ளார்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள் இங்கே இருக்கக்கூடியவர்களுக்கு வழங்குவதற்காக ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. வீடுகள் கட்டி முடித்த பின்னர் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும்.

வீடு இல்லாத ஏழை மக்கள் ஆற்றங்கரையோரத்திலும், ஓடை பகுதிகளிலும் சிரமப்படுவதை தவிர்ப்பதற்காக ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டும் வசிக்கக்கூடியவர்களுக்கு 2 ஆயிரத்து 800 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அந்த பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சிறப்பாக செய்யும் பட்சத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாமல் பாதுகாப்பதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

மேலும் செய்திகள்