தொடர் மழையால் ஊட்டி பகுதியில் 23 வீடுகள் சேதம்

தொடர் மழையால் ஊட்டி பகுதியில் 23 வீடுகள் சேதமடைந்து உள்ளன. மண்சரிவு ஏற்பட்டதால் அந்தரத்தில் வீடுகள் தொங்கி கொண்டு இருக்கின்றன.

Update: 2018-08-18 22:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து அம்பேத்கர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் எளிதில் நடந்து செல்லும் வகையிலும், வீடுகள் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும் நகராட்சி மூலம் நடைபாதை, தடுப்புச்சுவர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-இத்தலார் சாலை போன்ற முக்கிய இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோடப்பமந்து அம்பேத்கர் காலனியில் குடியிருப்பு பகுதிகளில் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேற்பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சி அளிக் கிறது. அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் விரிசல்களும் காணப்படுகின்றன.

அதே பகுதியில் ராணி என்பவருக்கு சொந்தமான வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென மழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தொடர் மழையால் ஊட்டி தாலுகாவுக்கு உட்பட்ட அனுமாபுரம், இந்திராநகர், ஊட்டி எல்க்ஹில், அம்பேத்கர் காலனியில் 2 வீடுகள், ஊட்டி எல்க்ஹில் குமரன் நகரில் 1 வீடு, நஞ்சநாடு கவர்னர்சோலையில் 1 வீடு, உல்லத்தில் 1 வீடு உள்பட கடந்த 4 நாட்களில் மொத்தம் 23 வீடுகள் சேதமடைந்து உள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக உடனடியாக ஒரு வீட்டிற்கு ரூ.4 ஆயிரத்து 100 உதவித்தொகையை வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி அருகே தலைகுந்தா, ஊட்டி-மஞ்சூர் சாலை லவ்டேல் பகுதியில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினார்கள்.

மேலும் செய்திகள்