குமரியின் அழகை வானில் இருந்து ரசிக்க ஹெலிகாப்டர் பயணம் 31–ந் தேதி தொடங்குகிறது

குமரி மாவட்டத்தின் அழகை வானில் இருந்து ரசிக்க, ஹெலிகாப்டர் பயணம் வருகிற 31–ந் தேதி தொடங்குகிறது.

Update: 2018-08-22 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் இயற்கை அழகை வானில் இருந்து ரசிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுப்பயணம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில் கிட்டி நிறுவனம், பார்த்தாஸ், டி.என்.74 டிராவல்ஸ், டாடா மோட்டார்ஸ், வி.எல்.ஆர். ரெசிடன்சி, ஒலிவியா பிராஜெக்ட் மற்றும் சிவா ஆஸ்பத்திரி இணைந்து இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து கிட்டி நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் வளர் அகிலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த சுற்றுப்பயணம் வருகிற 31–ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து செப்டம்பர் 4–ந் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே சுற்றுப்பயணம் செய்ய முடியும். நாள் ஒன்றுக்கு 200 பேர் வீதம் 5 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 1000 பேர் ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் செய்யலாம். தோவாளை எல்.எச்.எல். சி.பி.எஸ்.இ. பள்ளி மைதானத்தில் இருந்து புறப்படும் ஹெலிகாப்டர் வான்வெளியாக சுமார் 30 கிலோ மீட்டர் வரை சுற்றி வரும். அதில் 4 பேர் பயணம் செய்யலாம்.

சுற்றுப்பயணம் நடைபெறும் நாட்களில் மாலை 5 மணிக்கு பிறகு ஹெலிகாப்டர் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி மாணவ–மாணவிகளுக்கு தலைசிறந்த நிபுணர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. ஹெலிகாப்டர் சுற்றுப்பயண தொடக்க விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஹென்றி லுசியஸ், பன்னீர்செல்வம், குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்