பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை

குள்ளஞ்சாவடி அருகே தந்தை திட்டியதால் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-08-23 22:00 GMT
குறிஞ்சிப்பாடி, 


குள்ளஞ்சாவடி அருகே உள்ள கட்டியங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன்கள் அரிகிருஷ்ணன் (வயது 18), கோபிகிருஷ்ணன்(16). இதில் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அரிகிருஷ்ணன் 12-ம் வகுப்பும், கோபி கிருஷ்ணன் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அரிகிருஷ்ணன் வீட்டில் இருந்த போது, அவரை கோவிந்தராஜ் திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அரிகிருஷ்ணன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குப்புசாமி(45) என்பவர் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்