கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது.

Update: 2018-08-26 00:06 GMT
மைசூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மலைநாடு என அழைக்கப்படும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின.

முக்கியமாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூருவில் உள்ள கபினி அணையும் கடந்த 2 மாதங்களில் 2 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது இரு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 124.70 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21,170 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 21,202 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் மழை பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 8,328 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்படும் அளவை விட, உள்ளே வரும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் கே.ஆர்.எஸ். அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால், நேற்று காலை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.

இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,282.68 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13,116 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12,708 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளது. கபினி அணையில் சீரான அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 33,910 கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 24,578 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்