போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நெல்லை அருகே சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-08-27 22:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வீரளபெருஞ்செல்வி கிராமத்தில் பழமை வாய்ந்த கோவில் உள்ளது. அந்த கோவிலை புதுப்பித்து சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அங்கு முத்துராமலிங்க தேவர் சிலையும் நிறுவப்பட்டது.

இதை அறிந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார், சிலையை அகற்றினர். பின்னர் அந்த சிலையை சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர்.

சிலை அகற்றப்பட்டதை கண்டித்தும், அந்த சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும் அகில இந்திய பெடரல் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் ஆனந்தமுருகன் தலைமையில் கிராம மக்கள் ஏராளமானோர் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார், ஆனந்தமுருகன் உள்பட 100 பேரை கைது செய்தனர். இதில் 30 பேர் பெண்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வேன்களில் ஏற்றி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்